சேஹோர்: மத்தியப் பிரதேச மாநிலத்தில், எருதுகளை வாங்கவோ, வாடகைக்கு எடுக்கவோ பணமில்லாத விவசாயி, தனது இளம் மகள்களையே ஏரில் பூட்டி நிலத்தை உழுத சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேசம், சேஹோர் மாவட்டம் பசந்த்புர் பங்கிரி கிராமத்தில், சர்தார் பரேலா(45) என்ற விவசாயி, தனது இரண்டு மகள்களான ராதா (15), குந்தி (13) ஆகியோரை எருதுகளுக்கு பதில் ஏர் கலப்பையில் பூட்டி நிலத்தை உழுதார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகப் பரவியது.
இது குறித்து சர்தார் பரேலா கூறுகையில், பணக் கஷ்டம் ஏற்பட்டதால் என் மகள்களை பள்ளிக்கு அனுப்ப முடியவில்லை. என்னுடன் விவசாயத்துக்கு உதவியாக இருந்தனர். நிலத்தை உழுவதற்கு எருதுகளை வாங்க பணமில்லாததால், வேறு வழியின்றிதான் ஏர் கலப்பையில் என் மகள்களை பூட்டி நிலத்தை உழுதேன் என்கிறார் கவலை தோய்ந்த முகத்தோடு.
இது குறித்து செய்திகள் பரவியதை அடுத்து, சர்தாரை தொடர்பு கொண்ட மாவட்ட மக்கள் தொடர்பு அதிகாரி, அரசு திட்டங்களின் கீழ் தேவையான உதவிகள் வழங்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.
பல மாநிலங்களில் விவசாயக் கடன் மற்றும் வறட்சி காரணமாக ஏராளமான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கும் நிலையில், வறுமை காரணமாக விவசாயி ஒருவர் மகள்களையே ஏர் கலப்பையில் பூட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.