அரசுக்கு எதிராக 369 நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள்: மத்திய சட்ட அமைச்சகம் தகவல்
அரசுக்கு எதிராக 369 நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக மத்திய சட்ட அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மத்திய சட்ட அமைச்சகத்தின் தகவல்களின் அடிப்படையில், கடந்த மாதம் 12- ஆம் தேதி நிலவரப்படி, நாடு முழுவதும் அரசுக்கு எதிராக 1,35,060 வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவற்றில், 369 வழக்குகள் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளாகும்.
இவற்றில், அதிகப்படியாக ரயில்வே துறைக்கு எதிராக 241 நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதற்கு அடுத்தபடியாக, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு எதிராக 68 வழக்குகளும், தொலைத் தொடர்பு அமைச்சகத்துக்கு எதிராக 21 வழக்குகளும் நிலுவையில் உள்ளன.
பெரும்பாலும் அரசின் சேவைகள் தொடர்பான விவகாரங்கள், தனியார் நிறுவனங்களுடனான மோதல்கள், அரசுத் துறைகளுக்கு இடையேயான மோதல்கள், பொதுத் துறை நிறுவனங்களுக்கு இடையேயான முரண்பாடுகள் ஆகியவை காரணமாக, அரசுக்கு எதிராக வழக்குகள் தொடுக்கப்படுகின்றன.
நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளைப் பொருத்த வரை, பெரும்பாலும் நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றத் தவறியது, உரிய நேரத்தில் பதில் மனு தாக்கல் செய்யத் தவறியது, உரிய நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியது உள்ளிட்ட காரணங்களுக்காகத் தொடுக்கப்படும்.
எனினும், தற்போது நிலுவையில் உள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளுக்கான காரணங்களை மத்திய சட்ட அமைச்சகம் கடந்த மாதம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கவில்லை.