பெருமதிப்பு ரூபாய் நோட்டுகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்ட 8 மாதங்களுக்குப் பிறகு அவற்றை எண்ணுவதற்கான இயந்திரங்களை ரிசர்வ் வங்கி கொள்முதல் செய்ததை முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் கிண்டல் செய்துள்ளார்.
இதுகுறித்து சுட்டுரை (டுவிட்டர்) சமூக வலைதளத்தில் வியாழக்கிழமை குறிப்பிட்டதாவது:
புழக்கத்திலிருந்து நீக்கப்பட்ட 500, 1000 நோட்டுகளை எண்ணுவதற்காக, அந்த அறிவிப்பு வெளியான 8 மாதங்களுக்குப் பிறகு இயந்திரங்களை ரிசர்வ் வங்கி விலை கொடுத்து வாங்கியுள்ளது.
செல்லாத நோட்டுகளை எண்ணுவதற்கு இயந்திரங்களை வாடகைக்கு எடுத்தாலே போதும் என்னும் நிலையில், "வாடகை' என்ற வார்த்தையை ரிசர்வ் வங்கி கேள்விப்பட்டதில்லை போலும் என்று தனது பதிவில் ப. சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.
வங்கிகளில் திருப்பிச் செலுத்தப்பட்ட பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் தொடர்ந்து எண்ணப்பட்டு வருவதாகவும், அவற்றின் மொத்த எண்ணிக்கை தற்போது தெரியாது எனவும் நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையை கடுமையாக எதிர்த்து வரும் சிதம்பரம், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை இது மோசமாக பாதிக்கும் என்று கூறி வருகிறார்.