பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கூட்டணி அரசில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் யாதவ் மீது
ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது.
அதுமட்டுமல்லாமல் இந்த ஊழல் வழக்கின் குற்றப்பத்திரிக்கையில் லாலு மகன் தேஜஸ்வி யாதவின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. இவர், பீகார் மாநில துணை
முதல்வராக உள்ளார்.
இந்நிலையில், அம்மாநிலத்தில் இரு துருவங்களாக இருந்த இந்த இரண்டு கட்சிகளும் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போது கூட்டணி அமைத்து
வெற்றிபெற்று ஆட்சியைக் கைப்பற்றின. இதனால், இந்த சிபிஐ விசாரணைகளில் அவ்விரு கட்சிகளுக்கு இடையிலும் மீண்டும் விரிசல் விழத்தொடங்கியுள்ளது.
இதுகுறித்து அம்மாநில முன்னாள் முதல்வரும், ஹிந்துஸ்தானி ஆவாம் மோர்ச்சா கட்சியின் தலைவருமான ஜிதன் ராம் மாஞ்சி கூறியதாவது:
நான் இதை முதல்நாளில் இருந்தே கூறி வருகிறேன். முதல்வர் பதவியை தக்க வைக்க நிதீஷ் குமார் எந்த எல்லைக்கும் போவார். தற்போது சிபிஐ வழக்கில்
சிக்கியுள்ள லாலு மகன் தேஜஸ்வி நிச்சயம் பதவி விலகமாட்டார்.
இதுபோன்று குற்றச்சாட்டுகளில் எப்போது ஆதாரத்துடன் சிக்கினாரோ, அப்போதே தேஜஸ்வியை முதல்வர் நிதீஷ் பதவிநீக்கம் செய்திருக்க வேண்டும். ஆனால்,
இதுவரை அதைச் செய்யவில்லை.
இதற்கு காரணம் அவர்களின் கூட்டணியை தக்க வைத்துக்கொண்டு, தனது முதல்வர் பதிவியை காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்பதுதான் என்றார்.