ஜம்மு காஷ்மீரின் சதோரா பகுதியில் உள்ள ட்ரால் மாவட்டத்தில் தீவிரவாதிகளுக்கும், எல்லையோர பாதுகாப்புப் படைக்கும் இடையிலான துப்பாக்கிச்சூடு சனிக்கிழமை காலை முதல் நடைபெற்று வருகிறது.
இந்திய எல்லையில் ஊடுருவிய தீவிரவாதிகள், எல்லை பாதுகாப்புப் படை தளத்தை நோக்கி தாக்குதல் நடத்தினர். இதையடுத்து எல்லை பாதுகாப்புப் படையினர் பதிலடியில் ஈடுபட்டனர். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் காலை 8 முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
தற்போது வரை நீடித்து வரும் இந்த துப்பாக்கிச் சூட்டில் இதுவரை 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும், ஒருவர் அருகிலுள்ள குகைப் பகுதிக்குள் சென்று
மறைந்துள்ளார்.
இதுகுறித்து ஜம்மு காஷ்மீர் காவல்துறை இயக்குநர் எஸ்.பி. வய்ட் கூறியதாவது:
ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள இந்திய எல்லைப்பகுதியில் தீவிரவாதிகள் நுழைந்து தாக்குதலில் ஈடுபட்டனர். இதையடுத்து எல்லையோர பாதுகாப்புப் படை
தக்க பதிலடி அளித்து வருகிறது.
தீவிரவாதிகளின் அடையாளம் இதுவரை தெரியவில்லை. அவர்கள் எந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்ற தகவல் எதுவும் இல்லை. ஆனால், ஜைஷ்-ஈ-முகமது அமைப்பைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது என்றார்.
இந்நிலையில், சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதின் ஒருவனின் உடல் மட்டும் தற்போது மீட்கப்பட்டுள்ளது.