தில்லி உயிரியல் பூங்காவில் உள்ள பெண் சிம்பன்ஸி ஒன்று, தனது 56-ஆவது பிறந்தநாளை விரைவில் கொண்டாடவிருக்கிறது. தில்லி உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளிலேயே மிகவும் வயதான விலங்கு என்பதால், அந்த சிம்பன்ஸியின் பிறந்த நாளை விமரிசையாக கொண்டாட பூங்கா நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
ரீடா என்ற பெயருடைய அந்த சிம்பன்ஸி, நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் நகரில் இருந்து கடந்த 1964-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் குட்டியாக கொண்டுவரப்பட்டதாகும். அந்த சிம்பன்ஸி எப்போது பிறந்தது? என்ற விவரம் துல்லியமாக தெரியாவிட்டாலும், தில்லி உயிரியல் பூங்காவுக்கு கொண்டவரப்பட்ட தினத்தை அடிப்படையாக கொண்டு அதன் பிறந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, நிகழாண்டில் தனது 56-ஆவது பிறந்த நாளை பூங்காவில் கொண்டாடவிருக்கிறது ரீடா.
இதுதொடர்பாக தில்லி உயிரியல் பூங்கா இணை இயக்குநர் ராஜா ராம் சிங் கூறுகையில், "இந்த பூங்காவில் உள்ள ஒரேயொரு சின்பன்ஸி ரீடாதான். மனிதர்கள் போலவே குணம் கொண்ட ரீடா, பார்வையாளர்களுடன் இருப்பதையே விரும்பும்.
ஒரு காலத்தில் பார்வையாளர்களை கவர்ந்திழுக்கும் விலங்குகளில் ஒன்றாக இருந்த ரீடா, இப்போது வயது காரணமாக முன்போல செயல்பட இயலாத நிலையில் இருக்கிறது.
எனினும், ரீடாவுக்கும் இந்த பூங்காவுக்குமான உறவு மிக நீண்டப் பயணமாகும். ரீடாவின் ஜோடியாக இருந்த ஆண் சிம்பன்ஸி, விலங்குகள் பரிமாற்ற திட்டத்தின்படி ஜெய்ப்பூர் உயிரியல் பூங்காவுக்கு வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு ரீடா 3 குட்டிகளை ஈன்றது. ஆனால், அவற்றில் எதுவும் உயிர் பிழைக்கவில்லை. வயது காரணமாக உணவை குறைவாக எடுத்துக் கொண்டாலும் எந்த நோய்த் தாக்குதலும் இல்லாமல் ரீடா இருக்கிறது.
இந்த ஆண்டு இறுதியில் ரீடாவின் பிறந்தநாளை முன்னெப்போதும் இல்லாத வகையில் கொண்டாடத் திட்டமிட்டுள்ளோம் என்றார் அவர்.