நாடு முழுவதும் வருமான வரித்துறை ஆணையர்கள் 300-க்கும் மேற்பட்டோரை மத்திய அரசு அண்மையில் பணியிடமாற்றம் செய்துள்ளது.
வருமான வரித் துறையின் பணிகளை நெறிமுறைப்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கையை மத்திய அரசு எடுத்துள்ளது.
வருமான வரித் துறை தொடர்பான கொள்கைகளை வடிவமைக்கும் மத்திய நேரடி வரிகள் வாரியம் சமீபத்தில் இரு பிரிவாக அதிகாரிகளைப் பணியிடமாற்றம் செய்ய முடிவெடுத்தது. அதன்படி முதல் கட்டமாக ஆணையர் நிலையில் உள்ள 80 அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டனர். அதனைத் தொடர்ந்து 245 பேருக்கு வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.
இதற்கு முன்பு கடந்த மே 31-ல் 50 தலைமை ஆணையர்களுக்கு பணியிட மாற்ற உத்தரவு வழங்கப்பட்டது. கடந்த சில ஆண்டுகளில் வருமானவரித் துறையில் இந்த அளவுக்கு அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும்.
வருமானவரித் துறை செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மை, பணித்திறனை மேம்படுத்துவது உள்ளிட்ட காரணங்களுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
வரி செலுத்துவோருக்கு சாதகமான பல்வேறு நடவடிக்கைகளை வருமான வரித் துறை தொடர்ந்து மேற்கொள்ள இருக்கிறது. எனவே, பணியிடமாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகள் அனைவரும் கூடிய விரைவில் புதிய இடத்தில் பணியைத் தொடக்க வேண்டுமென்றும் அவர்களுக்கு வலியுறுத்தப்பட்டது என்று வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.