மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகு விதைகளின் விற்பனையை அனுமதிப்பது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு திங்கள்கிழமை தெரிவித்தது.
இதுகுறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர் மற்றும் நீதிபதி டி.ஒய். சந்திரசூட் அடங்கிய அமர்விடம் மத்திய கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறியதாவது:
மரபணு மாற்றக் கடுகு விவகாரத்தில், பல்வேறு அம்சங்களையும் மத்திய அரசு சீராய்வு செய்து வருகிறது. அத்தகைய கடுகு விதைகளை நிறுவனங்கள் வர்த்தகரீதியில் விற்பனை செய்வதை அனுமதிப்பது குறித்து பல்வேறு தரப்பினரிடமிருந்து கருத்துகள் கேட்டறியப்பட்டு வருகின்றன என்றார் அவர்.
இதையடுத்து, இந்த விவகாரம் குறித்து முழுமையாக அறிந்துகொண்டு, இதுதொடர்பான முழுமையான கொள்கை முடிவுகள் எப்போது எடுக்கப்படும் என்பதை ஒரு வாரத்துக்குள் தெரியப்படுத்துமாறு மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகு விதைகளை சந்தையில் விற்பனை செய்யத் தடை விதிக்குமாறு அருணா ரோட்ரிகஸ் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு மனு தாக்கல் செய்திருந்தார்.
ரோட்ரிகஸ் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண், மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகு விதைகளை பல்வேறு விளைச்சல் நிலங்களில் மத்திய அரசு பரிசோதனை முறையில் விதைத்து வருவதாகவும், இதனால் ஏற்படக்கூடிய உயிரி பாதிப்புகள் குறித்த நிலை அறிக்கையை மத்திய அரசு வெளியிடத் தவறியதாகவும் குற்றம் சாட்டினார்.
மேலும், தொழில்நுட்ப வல்லுநர் குழு சுட்டிக் காட்டியுள்ளதுபோல் மரபணு மாற்றக் கடுகு விதை விவகாரத்தில் ஒழுங்காற்று நடைமுறைகள் அனைத்தும் மீறப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், இதன் காரணமாக மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகு விதைகளின் விற்பனைக்கும், அவற்றை விளைநிலங்களில் விதைத்துப் பரிசோதிப்பதற்கும் 10 ஆண்டுகால இடைக்காலத் தடை விதிக்குமாறு அவர் கோரியிருந்தார்.
அதையடுத்து, மரபணு மாற்ற விதை விற்பனைக்கு மறு உத்தரவு வரும்வரை உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு அக்டோபர் 17-ஆம் தேதி உத்தரவிட்டது.