பிகாரில் நிலவி வரும் பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில், அந்த மாநில முதல்வர் நிதீஷ் குமாரை துணை முதல்வரும், லாலு பிரசாத்தின் மகனுமான தேஜஸ்வி யாதவ் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினார்.
ராஷ்ட்ரீய ஜனதா தளக் கட்சித் தலைவர் லாலு பிரசாத் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது ரயில்வே துறை தொடர்பாக பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து, ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும் தேஜஸ்வி யாதவை துணை முதல்வர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இதனிடையே, இந்த விவகாரம் குறித்து நிதீஷ் குமார் தலைமையில் அண்மையில் நடைபெற்ற கூட்டத்தில், தேஜஸ்வி யாதவ் தாமாக முன்வந்து பதவி விலக வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், பிகாரில் ஆளும் கூட்டணியான ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம் ஆகியவற்றுக்கு இடையே பிளவு ஏற்பட வாயப்புள்ளதாக ஊகங்கள் வெளியாகின.
சந்திப்பு: இந்த பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில், முதல்வர் நிதீஷ் குமாரை அவரது அலுவலகத்தில் தேஜஸ்வி யாதவ் செவ்வாய்க்கிழமை மாலை சந்தித்து பேசியுள்ளார். ஆனால், இந்த சந்திப்பில் என்ன விவாதிக்கப்பட்டது என்பது தெரியவில்லை. எனினும், தேஜஸ்வி யாதவை பதவி விலகுமாறு நிதீஷ் வலியுறுத்தியதாகவும், அதைத் தவிர வேறு சிறந்த வழி ஏதுமில்லை என்று அவர் கூறியதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அப்போது, இந்த விஷயம் குறித்து முடிவெடுக்க தமக்கு கால அவகாசம் தேவைப்படுவதாக தேஜஸ்வி கூறியதாகவும் அந்த வட்டாரங்கள் கூறுகின்றன.