மகளிருக்கான இட ஒதுக்கீட்டு சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டும் என முன்னாள் பிரதமர் எச்.டி. தேவெ கெளடா கேட்டுக் கொண்டார்.
பெங்களூரு அரண்மனை மைதானத்தில் நடைபெற்ற மஜத மகளிர் அணி மாநாட்டைத் தொடக்கிவைத்து அவர் பேசியது:
நான் (தேவெ கெளடா) பிரதமராகப் பதவி வகித்த போது மகளிர் இட ஒதுக்கீடு சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்ட திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால், மாநிலங்களவையில் நிறைவேற்றப்படாமல் உள்ளது.
எனவே, மத்திய அரசு உடனடியாக மகளிருக்கான இட ஒதுக்கீடு சட்டத் திருத்த மசோதாவை மாநிலங்களவையில் நிறைவேற்றி அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது பாஜக தலைமையிலான மத்திய அரசு பெரும்பான்மை பலத்தைப் பெற்றுள்ளதால், சட்டத் திருத்த மசோதாவை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளேன்.
இந்த மசோதாவை நிறைவேற்ற காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஆதரவு தெரிவிக்கும். மகளிருக்கான இட ஒதுக்கீடு சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டால், மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் மகளிருக்கு 84 தொகுதிகள் ஒதுக்கப்படும்.
இதனால் மகளிர் அதிகம் பயனடைவார்கள். உள்ளாட்சி அமைப்புகளில் மகளிருக்கான இட ஒதுக்கீட்டை அவரது கணவர்களே எதிர்ப்பது வேடிக்கையாக உள்ளது. மகளிருக்கு இட ஒதுக்கீடு அளித்தால் மட்டுமே நாடு வளர்ச்சிப் பாதையில் செல்ல முடியும் என்றார். மாநாட்டில் கர்நாடக முன்னாள் முதல்வர் எச்.டி.குமாரசாமி, நாராயணராவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.