புதுதில்லி: நாட்டின் 14-ஆவது குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ராம்நாத் கோவிந்துக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், குடியரசுத் தலைவர் இந்திய அரசியல் சாசனத்தின் பாதுகாவலராக விளங்கி ஜனநாயக மாண்புகளை மேம்படுத்துபவர் என்றும், அந்த உயர்ந்த பதவிக்கு தேர்ந்து எடுக்கப்பட்டுள்ள ராம்நாத் கோவிந்துக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறியுள்ளார்.
இதேபோன்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டர் மூலம் தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார். அதில், குடியரசுத் தலைவர் பதவி காலம் சிறப்பாக அமைய வாழ்த்துவதாக தெரிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவர் தேர்தல் முடிவுகள் நேற்று வியாழக்கிழமை அறிவிக்கப்பட்ட நிலையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் முன்னிறுத்தப்பட்ட வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு நாடு முழுவதும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.