மத்திய அரசுத் துறைகளில் உயர் பொறுப்புகள் வகித்து வரும் ஐஏஎஸ் அதிகாரிகள் 35 பேருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மத்திய பணியாளர் நலத் துறை அமைச்சகம் சனிக்கிழமை பிறப்பித்தது.
மத்திய அமைச்சகங்களில் இணைச் செயலர் அல்லது கூடுதல் செயலர் பொறுப்பு வகித்து வந்த அந்த அதிகாரிகளுக்கு பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு அளிக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேவேளையில், அவர்களில் பெரும்பாலானோர் வேறு துறைகளுக்கு மாற்றப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
பதவி உயர்வு பெற்ற ஒரு சில அதிகாரிகளின் விவரம் (அடைப்புக்குறிக்குள் அவர்கள் முன்பு வகித்த பதவி)
உஷா சர்மா - இயக்குநர், இந்திய தொல்லியல் ஆராய்ச்சித் துறை (கூடுதல் செயலர், நிர்வாக சீர்திருத்தம் மற்றும் மக்கள் குறை தீர்ப்புத் துறை)
வசுதா மிஸ்ரா - கூடுதல் செயலர், நிர்வாக சீர்திருத்தம் மற்றும் மக்கள் குறை தீர்ப்புத் துறை (மேலாண் இயக்குநர், தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகம்)
மனோஜ் குமார் - கூடுதல் செயலர், மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை (லஞ்ச ஒழிப்புத் துறை தலைமை அதிகாரி, தில்லி)
அலோக் வர்தன் சதுர்வேதி - இயக்குநர், சர்வதேச வர்த்தக நடவடிக்கைகள் துறை (கூடுதல் செயலர், மத்திய வணிகத் துறை)
சுனில் குமார் - கூடுதல் இயக்குநர், மத்திய வணிகத் துறை (இணை இயக்குநர், மத்திய வணிகத் துறை)
நரேந்திர நாத் சின்ஹா - மேலாண் இயக்குநர், தேசிய நெடுஞ்சாலைகள் உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகம் (ஜார்க்கண்ட் மாநில அரசு நிர்வாகத்தில் பணியாற்றி வந்த ஐஏஎஸ் அதிகாரி)
ராமேஷ்வர் பிரசாத் குப்தா - மேலாண் இயக்குநர், தேசிய வக்ஃப் வாரிய மேம்பாட்டுக் கழகம் (இணை இயக்குநர் நிலக்கரித் துறை)
ரண்வீர் கெளர் - தலைமை நிர்வாக இயக்குநர், இந்திய சுற்றுலா மேம்பாட்டுக் கழகம் (இணை இயக்குநர், தொழிலக காவல் மேம்பாட்டுத் துறை)
விஜய்குமார் தேவ் - இயக்குநர், தேசிய தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் (தேர்தல் துணை ஆணையர், தில்லி)
அசோக் எம்.ஆர். தளவாய் - தலைமை செயல் அதிகாரி, மானாவாரி பகுதி (மழை நீரை நம்பி விவசாயம் செய்யும் இடங்கள்) மேம்பாட்டு அமைப்பு (கூடுதல் செயலர், மத்திய வேளாண் அமைச்சகம்)
இவர்களைத் தவிர, அனூப் வாதவன், பிரவீண் குமார், லலித் குமார், ராமகிருஷ்ண ராவ், பிரதீப் குமார் திரிபாடி உள்பட பல ஐஏஎஸ் அதிகாரிகள் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.