ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநிலம், குப்வாரா மாவட்டத்தில் உள்ள சர்வதேச எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை கடக்க முயன்ற பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார்.
ஜம்மு காஷ்மீரில் அமைதியின்மை ஏற்படுத்தும் எண்ணத்தில் பாகிஸ்தான் ராணுவம் அடிக்கடி பயங்கரவாதிகளை இந்தியாவிற்குள் ஊடுருவ செய்து வருகிறது. இந்தியாவிற்குள் ஊடுருவி வரும் பயங்கரவாதிகளுக்கு இந்திய ராணுவம் வீரர்களும் தக்க பதிலடி கொடுத்து வருகின்னர்.
இந்நிலையில், காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் உள்ள சர்வதேச எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் இன்று காலை எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருந்து சந்தேகத்துக்கிடமான வகையில் சிலர் நடமாடுவதை எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் கண்டறிந்தனர்.
அப்போது, பாதுகாப்புப் படை வீரர்கள் பயங்கரவாதிகளை தங்களிடம் சரணடைந்து விடும்படி எச்சரித்தனர்.
ஆனால், செவிசாய்க்காத பயங்கரவாதிகள் பாதுகாப்பு வீரர்களை நோக்கி சரமாரியாக சுட்டனர். தொடர்ந்து, வீரர்களும் அவர்கள் மீது பதில் தாக்குதல் நடத்தினர். இரு தரப்புக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடந்தது.
இதில், பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். மற்ற பயங்கரவாதிகள் தப்பி ஓடிவிட்டனர். இதன் மூலம் பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டது. மேலும், அப்பகுதியில் பயங்கரவாதிகளை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.