பாகிஸ்தானிலிருந்து ஜம்மு-காஷ்மீர் எல்லைப் பகுதி வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற பயங்கரவாதியை இந்திய ராணுவத்தினர் சுட்டுக் கொன்றனர்.
வடக்கு காஷ்மீரில் உள்ள மச்சில் பகுதியில் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டு பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதி வழியாக இந்திய எல்லைக்குள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் சிலர் ஊடுருவ முயன்றனர்.
அப்போது, அந்த வழியாக ரோந்து சென்ற ராணுவத்தினர், அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். பயங்கரவாதிகளும் பதிலுக்கு ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தினர். இந்த துப்பாக்கிச் சண்டையில் பயங்கரவாதி ஒருவர் கொல்லப்பட்டார். இதையடுத்து, அங்கிருந்து பயங்கரவாதிகள் தப்பியோடிவிட்டதாக ராணுவ உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.