அமர்நாத் யாத்ரீகர்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு உதவிபுரிந்த ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த இரண்டு பயங்கரவாதிகளின் அடையாளம் தெரிந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இமயமலையில் உள்ள அமர்நாத் குகைக்கோயில் பனிலிங்கத்தை தரிசித்துவிட்டு ஜம்மு வழியாக ஆயிரக்கணக்கான யாத்ரீகர்கள் கடந்த 10-ஆம் தேதி திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, யாத்ரீகர்கள் வந்த பேருந்துகளின் மீது பயங்கரவாதிகள் சிலர் துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் 8 யாத்ரீகர்கள் உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக ஜம்மு-காஷ்மீர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், இந்தத் தாக்குதலில் ஈடுபட்டது பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் என்பது தெரியவந்தது.
இந்நிலையில், இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு உதவிய உள்ளூர் பயங்கரவாதிகளின் அடையாளம் தெரிந்திருப்பதாக ஜம்மு-காஷ்மீர் ஐ.ஜி. முனீர் கான் தெரிவித்தார். இதுகுறித்து ஸ்ரீநகரில் செய்தியாளர்களிடம் அவர் திங்கள்கிழமை கூறியதாவது:
காஷ்மீரில் உள்ள பிராக்போரா பகுதியில் லஷ்கர் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கடந்த 17-ஆம் தேதி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில், போலீஸார் அங்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது, அங்குள்ள ஒரு வீட்டில் மறைந்திருந்த பயங்கரவாதிகள் போலீஸாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். போலீஸாரும் பதிலடி கொடுத்தனர்.
இந்தத் தாக்குதலில் அங்கிருந்த இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், அவர்கள் காஷ்மீரைச் சேர்ந்த ஜிப்ரான் மற்றும் சாத் என்பதும், அமர்நாத் யாத்ரீகர்கள் மீது தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு இவர்கள் உதவியிருப்பதும் தெரியவந்தது என முனீர் கான் தெரிவித்தார்.