புதுதில்லி: நாட்டின் 14-ஆவது குடியரசுத் தலைவராக பிகார் முன்னாள் ஆளுநரான ராம்நாத் கோவிந்த் இன்று நண்பகல் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்திய ஜனாதிபதியாக இருந்த பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து புதிய குடியரசுத் தலைவரைத் தேர்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்றது. இதில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி கூட்டணியின் சார்பாக, பிகார் முன்னாள் ஆளுநரான ராம்நாத் கோவிந்த்தும்,காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகளின் கூட்டணி சார்பாக முன்னாள் மக்களவை சபாநாயகரான மீரா குமாரும் போட்டியிட்டனர். இதில் ராம்நாத் கோவிந்த அதிக வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார்.
அதனை அடுத்து அவரது பதவியேற்பு விழா நாடாளுமன்ற மைய மண்டபத்தில் இன்று நடைபெற்றது. முன்னதாக தனது அக்பர் ரோடு இல்லத்திலிருந்து கிளம்பிய ராம்நாத் கோவிந்த், நேராக காந்தி நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார். பின்னர் விழா நடைபெறும் நாடாளுமன்ற மைய மண்டபத்திற்கு வருகை தந்தார்.
அங்கு அவருக்கு தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் பதவியேற்பு உறுதிமொழி செய்து வைத்தார். வண்ணமயமான இந்த நிகழ்வில், முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி,மக்களவை சபாநாயகர் சுமித்ரா மஹாஜன், காங்கிரஸ் தலைவர் சோனியா,பல்வேறு மாநில முதல்வர்கள் ஆளுநர்கள் மற்றும் பிரமுகர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாட்டிலிருந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பதவியேற்றுக் கொண்ட பின்பு பேசிய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தன்னுடைய பொறுப்பினை உணர்ந்து செயல்படுவேன் என்று தெரிவித்தார்.