மத்திய அரசின் பெண் ஊழியர்கள் பணியிடத்தில் நேரக் கூடிய பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பாக புகார் அளிக்க ஷீ-பாக்ஸ் என்ற வலைதளத்தை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சகம் திங்கள்கிழமை தொடங்கியது.
இந்த வலைதளத்தை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி, தில்லியில் தொடங்கி வைத்தார்.
இந்த வலைதளம் மூலம் புகார் அளிக்கப்பட்டால் அவற்றை உடனடியாக கவனித்து நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதிப்படுத்துமாறு அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த நிகழ்ச்சியில்மேனகா காந்தி பேசியதாவது:
பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தலின் தன்மை மற்றும் அளவு ஆகியவற்றை மதிப்பிட நாங்கள் விரைவில் தேசிய அளவில் ஆய்வொன்றை நடத்த உள்ளோம்.
தொடக்கத்தில், ஷீ-பாக்ஸ் வலைதளம் மூலம் மத்திய அரசின் பெண் ஊழியர்கள் பாலியல் துன்புறுத்தல் புகார்களைப் பதிவு செய்யலாம். எனினும், பின்னர் தனியார் துறையையும் இதில் சேர்க்கத் திட்டமிட்டுள்ளோம் என்றார் அவர்.
முன்னதாக, பல்வேறு மத்திய அமைச்சகங்களைச் சேர்ந்த பெண் ஊழியர்களிடம் இருந்து பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக மேனகா காந்திக்குப் புகார்கள் வந்தன.
அதைத் தொடர்ந்து இத்தகைய புகார்களைத் தெரிவிக்க வலைதளத்தை உருவாக்குவது என்று மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சகம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முடிவு செய்தது.