ஜம்மு-காஷ்மீர் மாநில எல்லையோரத்தில் பயங்கரவாதிகளின் ஊடுருவல் தினசரி நிகழ்வாகிவிட்டது. அதுமட்டுமல்லாமல் அவர்கள் இந்திய வீரர்கள் மீது திடீர் தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், பாகிஸ்தான் ராணுவமும் எல்லைமீறிய திடீர் தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட்டு வருகிறது. இருப்பினும், சிறப்பாக செயல்படும் இந்திய வீரர்கள் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இந்திய ராணுவம், எல்லையோர காவல்படை, பாதுகாப்புப் படை, சிறப்பு அதிரடிப் படை என பல்வேறு பட்டாலியன் வீரர்கள் இந்திய எல்லையை பாதுகாத்து வருகின்றனர். இதுபோன்ற அத்துமீறல் சம்பவங்களுக்கும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், எல்லையோர காவல்படையின் 78-ஆவது ஆண்டு விழா கொண்டாட்டங்கள் தெற்கு தில்லியின் லூதியானா சாலையில் உள்ள அதன் தலைமையகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வில் அதன் இயக்குநர் ராஜீவ் ராய் பாட்னாகர் பேசியதாவது:
ஜம்மு-காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதிகளில் தான் அதிகளவிலான பயங்கரவாதிகளின் ஊடுருவல் சம்பவங்கள் நடைபெறும். இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் மட்டும் 3.5 லட்சம் வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
நடப்பு ஆண்டில் மட்டும் இதுவரையில் 118 பயங்கர ஆயுதங்களை பயங்கரவாதிகளிடம் இருந்து கைப்பற்றியுள்ளோம். லஷ்கர்-இ-தொய்பா, ஹிசாபுல் முஜாஹிதின், ஜெய்ஷ்-இ-முகம்மது போன்ற சர்வதேச பயங்கரவாத அமைப்புகளைச் சேர்ந்த பலர் கொல்லப்பட்டும், கைது செய்யப்பட்டும் உள்ளனர்.
இந்த தாக்குதல் சம்பவங்களில் மட்டும் இதுவரை 75 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். 252 பேர் பிடிக்கப்பட்டுள்ளனர் என்றார்.