வறட்சி காரணமாக உழவுப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதால், கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து கால்வாய்கள் மூலம் ஏரிகளுக்கு தண்ணீர் திறந்துவிட மாநில அரசு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். மாறாக, தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடும் காங்கிரஸ் அரசை கண்டித்து நடைபயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக முன்னாள் முதல்வரும், மதச் சார்பற்ற ஜனதா தள மாநிலத் தலைவருமான குமாரசாமி தெரிவித்தார்.
இதுகுறித்து மைசூரில் செவ்வாய்க்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
கே.ஆர்.எஸ் அணையிலிருந்து கால்வாய்கள் மூலம் ஏரிகளை நிரப்ப வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் கோரிக்கையை அரசு உடனடியாக ஏற்க வேண்டும். விவசாயிகளின் போராட்டத்துக்கு மஜத ஆதரவளிக்கும். மாநிலத்தின் குடிநீர், விவசாயப் பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்காமல், தமிழகத்துக்கு கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடுவதிலே அக்கறையாக உள்ள மாநில அரசைக் கண்டித்து ஹுன்சூரிலிருந்து பெங்களூரு வரை நடைபயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளேன்.
முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு, பேரவைத் தேர்தலை மனதில் கொண்டு கூட்டுறவு வங்கிகளில் விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளது. அனைத்து விவசாயிகளும் பயனடையும் வகையில் வங்கிகளில் உள்ள அனைத்து கடன்களும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றார்.