தனது சொந்த மாநிலமான குஜராத்தில் மழை, வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பை பிரதமர் நரேந்திர மோடி ஹெலிகாப்டரில் சென்று செவ்வாய்க்கிழமை பார்வையிட்டார்.
வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் நெருங்கிய உறவினருக்கு ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் பிரதமர் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என்று அவர் அறிவித்தார். இது தவிர மத்திய அரசு மாநில பேரிடர் மேலாண்மைத் துறைக்கு ரூ.500 கோடி வழங்கும் என்ற அறிவிப்பையும் அவர் வெளியிட்டார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் விரைந்து வழங்குமாறு அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
குஜராத்தில் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்து வருகிறது. மழை, வெள்ளத்தில் சிக்கியும், வீடு இடிந்து விழுந்தும், இடி, மின்னல் தாக்கியும் இதுவரை 70 பேர் உயிரிழந்துவிட்டனர். 25 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறியுள்ளனர். அவர்கள் தாற்காலிக நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். பனாஸ்கந்த் மாவட்டம் மழையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தில் பல்வேறு நதிகளில் வெள்ளநீர் அபாய அளவுக்கு மேல் ஓடுகிறது. அணைகள் பலவும் நிரம்பி வழிகின்றன. ராணுவத்தினரும், விமானப் படையினரும் மீட்பு, நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.