'பிகார் முதல்வர் நிதீஷ் குமார் ஒரு சந்தர்ப்பவாதி' என்று அந்த மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தளக் கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார்.
ராஷ்ட்ரீய ஜனதா தளக் கட்சிக் கூட்டணியின் ஆதரவுடன் தேர்தலைச் சந்தித்து, பிகாரில் ஆட்சியமைத்த ஐக்கிய ஜனதா தளக் கட்சித் தலைவர் நிதீஷ் குமார், தனது முதல்வர் பதவியை புதன்கிழமை ராஜிநாமா செய்ததுடன், பாஜக ஆதரவோடு வியாழக்கிழமை மீண்டும் முதல்வராகப் பொறுப்பேற்றார்.
இந்த நிலையில், லாலு பிரசாத் யாதவ் ராஞ்சி நகரில் கூறியதாவது:
நிதீஷ் குமார் ஒரு சந்தர்ப்பவாதி. மதவாத சக்திகளுக்கு எதிரான பிகார் மக்களுக்கு மட்டுமன்றி, இந்திய மக்களுக்கே அவர் துரோகம் இழைத்துவிட்டார்.
2015-ஆம் ஆண்டுத் தேர்தலுக்கு முன்னர், தாம் தனியாகப் போட்டியிட்டால் வெற்றியடைய முடியாது என்பதை உணர்ந்து கொண்ட நிதீஷ் குமார், சிறுபான்மையினர் மற்றும் பின்தங்கிய சமூகத்தினரின் ஆதரவு பெற்ற எங்களுடன் கூட்டணி அமைத்து, அவர்களது வாக்குகளின் உதவியுடன் வெற்றி பெற்றார்.
தற்போது, அவர்களுக்கு எதிரான பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளார். ராஷ்ட்ரீய ஜனதா தளக் கட்சிக்கு எதிராக நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காகவே, பாஜகவும், ஐக்கிய ஜனதா தளமும் கைகோத்துள்ளன.
இனி எங்கள் கட்சியின் தலைவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் இல்லங்களில் மத்தியப் புலனாய்வுத் துறையும் (சிபிஐ), அமலாக்கத் துறையினரும் திடீர் சோதனைகளை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.
எனது மகன் தேஜஸ்விக்கு எதிராக ஊழல் புகார்களை எழுப்புகிறார்கள். உண்மையில் அவர் எந்த ஊழலிலும் ஈடுபடவில்லை. அப்படியே அவர் ஊழல் செய்திருந்தாலும், அதனை நீதிமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும். அதற்குள் தீர்ப்பு வழங்க இவர்கள் யார்? என்று லாலு பிரசாத் கேள்வியெழுப்பினார்.