பிகார் மாநிலத்தின் நன்மைக்காகவே ராஷ்ட்ரீய ஜனதா தளக் கூட்டணியிலிருந்து விலகி, பாஜகவுடன் கைகோத்திருப்பதாக பிகார் முதல்வர் நிதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.
லாலு பிரசாத் யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதா தளக் கட்சியின் ஆதரவுடன் பிகார் முதல்வராக இருந்த நிதீஷ் தனது பதவியிலிருந்து புதன்கிழமை விலகினார்.
முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி உள்ளிட்ட லாலுவின் குடும்பத்தினர் மீது ஊழல் புகார்கள் எழுந்த நிலையில் அவர் தனது பதவியை ராஜிநாமா செய்தார்.
இந்த நிலையில், பாஜக ஆதரவுடன் வியாழக்கிழமை மீண்டும் முதல்வர் பதவியை ஏற்ற நிதீஷ் குமார், செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
நான் எந்த முடிவை எடுத்திருந்தாலும், அதனை பிகார் மாநில மக்களின் நன்மையைக் கருதியே எடுத்துள்ளேன்.
இந்த முடிவு மாநிலத்தின் வளர்ச்சியையும், மாநிலத்தில் நீதி நிலைநாட்டப்படுவதையும் உறுதி செய்யும்.
இது எனது தனிப்பட்ட முடிவு அல்ல. பல தரப்பினருடன் கலந்து மேற்கொள்ளப்பட்ட முடிவு.
பிகார் மக்களின் மேம்பாட்டுக்காக நான் தொடர்ந்து பாடுபடுவேன் என உறுதியளிக்கிறேன் என்றார் அவர்.
நிதீஷ் குமாருடன், பாஜக மூத்த தலைவர் சுஷீல் குமார் மோடி துணை முதல்வராகப் பதவியேற்றது குறிப்பிடத்தக்கது.