புதுச்சேரி யூனியன் பிரதேசம் உள்பட 29 நகரங்களில் எதிர்காலத்தில் நில நடுக்கம் ஏற்பட அதிகம் வாய்ப்புள்ளதாக தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதில் தலைநகர் தில்லி, பாட்னா (பிகார்), ஸ்ரீநகர் (ஜம்மு}காஷ்மீர்), கொஹிமா (நாகாலாந்து), புதுச்சேரி, குவாஹாட்டி (அஸ்ஸாம்), காங்டாக் (சிக்கிம்), சிம்லா (ஹிமாசலப் பிரதேசம்), டேராடூன் (உத்தரகண்ட்), இம்பால் (மணிப்பூர்), சண்டீகர் ஆகிய நகரங்கள் இடம் பெற்றுள்ளன.
நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு அதிகம், மிக அதிகம் உள்ள பகுதிகளை பிரிவு 4, பிரிவு 5 என தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் வகைப்படுத்தியுள்ளது. இதில், மேற்கண்ட நகரங்கள் 4 மற்றும் 5}ஆவது பிரிவின் கீழ் வந்துள்ளன.
இமயமலையும் அது சார்ந்த பகுதிகளும் உலகிலேயே நிலநடுக்கம் ஏற்பட அதிக வாய்ப்புள்ள இடமாக ஏற்கெனவே கண்டறியப்பட்டுள்ளது. இப்போது சுட்டிக் காட்டப்பட்டுள்ள நகரங்களில் பெரும்பாலானவை இமயமலை அருகே அமைந்துள்ள இடங்களாகும். இந்த நகரங்களில் ஒட்டுமொத்த மக்கள்தொகை 3 கோடிக்கும் அதிகமாகும். எனவே, நிலநடுக்கம் ஏற்பட்டால் உயிர்ச்சேதமும், பொருள் சேதமும் அதிகமிருக்கும்.
மாநில ரீதியாகப் பார்க்கும்போது பெரும்பாலான வடகிழக்கு மாநிலங்கள், ஜம்மு}காஷ்மீர், ஹிமாசலப் பிரதேசம், உத்தரகண்ட், குஜராத்தின் கட்ச் பகுதி, பிகாரின் வடபகுதி, அந்தமான் நிகோபார் ஆகியவை நிலநடுக்க ஆபத்து மிக அதிகமுள்ள 5}ஆவது பிரிவின் கீழ் வந்துள்ளன.
தில்லி, ஜம்மு}காஷ்மீரின் ஒருபகுதி, சிக்கிம் உள்ளிட்டவை அதிக நிலநடுக்க ஆபத்துள்ள 4}ஆவது பிரிவின்கீழ் உள்ளன. சண்டீகர், பஞ்சாபின் அமிருதசரஸ் ஆகிய நகரங்களுக்கும் நிலநடுக்க ஆபத்துள்ளது.