வரும் 2019-ஆம் ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு தோல்வியைச் சந்திக்கும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி தெரிவித்தார்.
இதுகுறித்து கேரளத் தலைநகர் திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் அவர் புதன்கிழமை கூறியதாவது:
மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்துவதற்காக ஒதுக்கப்பட்ட நிதியை பாஜகவின் மூன்றாண்டு சாதனை குறித்து பிரசாரம் மேற்கொள்வதற்கு பயன்படுத்திக் கொள்ளுமாறு அரசின் பல்வேறு துறைகளுக்கும், அரசுடைமை நிறுவனங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
2014-ஆம் ஆண்டில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலுக்கான பிரசாரத்தின்போது ஆண்டுதோறும் 2 கோடி புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று பாஜக உறுதி அளித்திருந்தது. ஆனால், கடந்த 3 ஆண்டுகளையும் சேர்த்து மொத்தம் 1.35 லட்சம் வேலைவாய்ப்புகளே உருவாக்கப்பட்டுள்ளன.
பிரதமர் மோடி, அவரது அமைச்சரவை மீதும், அவர் சார்ந்துள்ள கட்சி மீதுமே நம்பிக்கை கொண்டிருக்கவில்லை. ஆனால், அவர் மீது மட்டும் அவருக்கு அதிக நம்பிக்கை உண்டு. இதுபோன்ற ஒருவர்தான் நம் நாட்டுக்கு தற்போது தலைமை தாங்கி வருகிறார்.
2019 மக்களவைத் தேர்தலுக்காக காங்கிரஸ் சிறப்பாக தயாராகி வருகிறது. காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி பல்வேறு முடிவுகளை எடுத்து வருகிறார். வரும் மக்களவைத் தேர்தலில் மோடி தோல்வியைச் சந்திப்பார் என்றார் வீரப்ப மொய்லி.