புதுதில்லி: நாடு முழுவதிலும் உள்ள ரேஷன் கடைகள் மற்றும் கூட்டுறவு பண்டகச் சாலைகளில் வழங்கப்படும் மண்ணெண்ணைய் வாங்குவதற்ககான அரசு மானியத்தை பெறுவதற்கு, இனி ஆதார் அட்டை அவசியம் என்று மத்திய அரசு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதிலும் உள்ள ரேஷன் கடைகள் மற்றும் கூட்டுறவு பண்டகச் சாலைகளின் மூலம், குடும்ப அட்டையிலில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கேற்ப, மானிய விலையில் தற்பொழுது மண்ணெண்ணை வழங்கப்படுகிறது.
சமையல் எரிவாயு உருளை வாங்குவதற்கு தற்பொழுது நடைமுறையில் உள்ள 'நேரடி மானிய' திட்டத்தின்படி, மத்திய அரசு அளிக்கும் மானியத் தொகையானது நேரடியாக நுகர்வோரின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படுகிறது.
இதே போல் ரேஷன் கடைகள் மற்றும் கூட்டுறவு பண்டகச் சாலைகளில் வழங்கப்படும் மண்ணெண்ணைக்கான மானியத் தொகையையும் நுகர்வோர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தும் திட்டத்தினை நடைமுறைப்படுத்த, மத்திய எண்ணை மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
இதற்காக பயனாளர்களுக்கு ஆதார் அட்டை அவசியம் என மத்திய அரசு தற்போது அறிவித்துள்ளது. அதற்கேற்ப நாடு முழுவதும் ரேஷன் அட்டைகளுடன், ஆதார் எண்ணை இணைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த பணிகளை நிறைவு செய்வதற்கு வசதியாக, மண்ணெண்ணெய் மானியத்திற்கென ஆதார் அட்டைகளை இணைக்கும் தேதியானது, வரும் 30-9-2017 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.