சென்னை: இந்தியாவில் முதன் முறையாக அதிக எடை கொண்ட ஜி.சாட்-19 செயற்கைகோளுடன், ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட்டானது இன்று வெற்றிகரமாக ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது.
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமானது தான் செலுத்தும் அதிக எடை கொண்ட செயற்கைகோள்களை எல்லாம் இதுவரை, பிரெஞ்ச் கயானாவில் இருந்து 'ஏரியன்' வகை ராக்கெட்டுகள் மூலம் விண்ணில் செலுத்தி வருகிறது.
இதற்கு மாற்றாக முற்றிலும் கிரையோஜெனிக் தொழில்நுட்பத்தில் செயல்படும் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட்டை இஸ்ரோ தற்பொழுது உள்நாட்டிலேயே தயாரித்து இருக்கிறது. இந்த வகை ராக்கெட்டைப் பயன்படுத்தி செயற்கைகோள் ஏவும் செயல் இன்று தொடங்கியது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா இரண்டாவது ஏவுதளத்திலிருந்து இன்று மாலை 5:28 மணிக்கு, ஜி.சாட்-19 தகவல்தொடர்பு செயற்கைகோளுடன் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. ஜி.சாட்-19 தகவல் தொடர்பு செயற்கைகோளானது 3,136 கிலோ எடைகொண்டது ஆகும். இந்த செயற்கைகோளின் ஆயுட்காலம் 10 ஆண்டுகள் ஆகும்.
இதில் நவீன வசதிகளுடன் கூடிய தகவல் தொடர்பு டிரான்ஸ்பாண்டர்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பூமியை படம் எடுத்து அனுப்புதல், கடல் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல், சாலை போக்குவரத்தை கண்காணித்தல், நிலம் தொடர்பான தகவல்கள், புவியியல் ஆய்வு உள்ளிட்ட பல்வேறு தகவல் தொடர்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிகிறது.
விண்ணில் ஏவப்பட்ட செயற்கைகோளானது தற்பொழுது பூமியிலிருந்து 179 கிலோ மீட்டர் தொலைவில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது.