துரா (மேகாலயா): மத்திய அரசு கொண்டு வந்துள்ள மாட்டிறைச்சி தடைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, மேலும் ஒரு மேகாலயா மாநில பாஜக தலைவர் ராஜிநாமா செய்துள்ளார்.
1960-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட மிருகவதை தடுப்பு சட்டத்தில் திருத்தம் செய்து, கால்நடை சந்தைகளில், இறைச்சிக்காக மாடுகளை விற்கவும், வாங்கவும் தடை விதித்து மத்திய அரசு சமீபத்தில் அறிவிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு நாடு முழுவதும் கடுமையான எதிர்ப்பு கிளப்பியுள்ளது
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இந்த தடை உத்தரவுக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வருகின்றன.
இந்நிலையில் கிறிஸ்தவ மக்கள் அதிகமாக வாழும் மேகாலயா, மிசோரம் மற்றும் நாகாலாந்து உள்ளிட்ட நாட்டின் வட கிழக்கு மாநிலங்களில், மாட்டிறைச்சி முக்கிய உணவாக விளங்குகிறது. எனவே மத்திய அரசின் இந்த நடவடிக்கையானது மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும் என முதலில் செய்திகள் பரவியது.
மத்திய அரசின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக மேகாலயா மாநில பா.ஜனதா மாவட்ட தலைவர் பெர்நார்த் மராக் சிலநாட்களுக்கு முன்பாக கட்சியில் இருந்து விலகினார். இந்நிலையில் பாஜகவுக்கு மேலுமொரு அதிர்ச்சியாக மேகாலயா பா.ஜனதாவின் வடக்கு காரோ ஹில்ஸ் மாவட்ட தலைவர் பாச்சு மாராக், தன்னுடைய கட்சி பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.
தனது இந்த முடிவு குறித்து பாச்சு மராக் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
என்னுடைய 'காரோஸ்' சமூதாய உணர்வுகளில் என்னால் சமரசம் செய்து கொள்ள முடியாது. மாட்டிறைச்சி சாப்பிடுவது என்பது எங்களுடைய கலாச்சாரம். பாரதீய ஜனதாவின் புரித ல் அற்ற ஒரு சித்தாந்தத்தை எங்கள் மீது திணிப்பதை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.