டேராடூன்: காஷ்மீர் இளைஞர்களை பாகிஸ்தான் மூளைச் சலவை செய்து தீவிரவாதத்தில் ஈடுபடுத்தி வருவதாக, ராணுவ தலைமைத் தளபதி பிபின் ராவத் கவலை தெரிவித்துள்ளார்.
உத்தரகண்ட் மாநிலம் டேராடூன் இந்திய ராணுவ பயிற்சி மையத்தில், பயிற்சி முடித்த ராணுவ வீரர்களின் கண்கவர் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் கலந்து கொண்டு வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு பேசுகையில், நாட்டில் பெரிய பிரச்னையாக பயங்கரவாதம் திகழ்கிறது. இதனை எதிர்த்து வீரர்கள் கடுமையாக போராட வேண்டும். மாநிலத்தில் நிலவும் அமைதியை கெடுக்கும் வகையில், காஷ்மீரில் உள்ள இளைஞர்களக்கு சிலர் தவறான தகவல்களை அளித்து அவர்களை வன்முறைப் பாதையில் பாகிஸ்தான் திருப்பிவிடுவதாக ராவத் குற்றம்சாட்டினார்.
இதனை தடுக்கும் வகையில் ராணுவம் தீவிரமாக செயலாற்றி வருகிறது. பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற வீரர்கள், இங்கு கற்றதையும், தங்களின் வீரத்தையும் பணிக்காலத்தில் பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
மேலும், ராணுவத்தில், போர் முனையில் பெண்களை ஈடுபடுத்தும் திட்டம் இருப்பதாகவும், துவக்க கட்டமாக ராணுவத்தில் பெண்கள் சேர்க்கப்படுவார்கள் என்றும் ராவத் தெரிவித்தார்.
இந்த பயிற்சி நிறைவு விழாவில், வீரர்களின் குடும்பத்தினர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
சிறப்பான வகையில் தேர்ச்சி பெற்ற வீரர்களுக்கு பரிசுகளையும் ராவத் வழங்கி சிறப்பித்தார்.