புவனேஸ்வர்: நாட்டிலேயே முதல் முறையாக சமூக வளர்ச்சி அலுவலராக சாதனா கின்னார் என்ற திருநங்கை நியமிக்கப்பட்டுள்ளதாக சமூக அறிவியல் கழக கல்வியியல் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது.
ஒரிசா மாநிலம் புவனேஸ்வரில் கலிங்கா சமூக அறிவியல் கல்வி நிறுவனம் இயங்கி வருகின்றது. இந்நிறுவனத்தில் சமூக வளர்ச்சி அலுவலராக சாதனா கின்னார் என்ற திருநங்கை நியமிக்கப்பட்டுள்ளார். கியோஞ்சர் நகரைச் சேர்ந்த சாதனா கின்னார் ஆரம்பத்தில் சதனா மிஸ்ரா என அழைக்கப்பட்டவர். சமூக சேவை மற்றும் வணிக நிர்வாகத்தில் எம்.ஏ பட்டம் பெற்றுள்ளார்.
நாட்டிலே தனியார் துறையில் ஒரு திருநங்கை ஒருவர் சமூக வளர்ச்சி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறை என தெரிவிக்கப்பட்டுள்ளது
புவனேஸ்வரில் கடந்த 14 ஆண்டுகளாக பாலின அடையாளம், பாலின பாகுபாடு, டிரான்ஸ்ஜெண்டர்களின் சமூக முக்கியத்துவம் மற்றும் நலன் குறைவான குழந்தைகள் மற்றும் பெண்களின் வளர்ச்சி குறித்தவற்றில் பணியாற்றி வந்துள்ளார்.
கடந்த காலத்தில் எச்.ஐ.வி எய்ட்ஸ் அலையன்ஸ், சத்தி மற்றும் யுஎன்டிபி போன்ற என்ஜிஓ போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் பணியாற்றி உள்ள சாதனா, 2016 அக்டோபரில் ஒரு மாதம் சர்வதேச பார்வையாளர்கள் தலைமைத்துவ திட்டத்திற்கு அமெரிக்கா சென்று வந்துள்ளார்.
இதுகுறித்து கலிங்கா சமூக அறிவியல் கல்வி நிறுவனம் நிறுவனர் டாக்டர் அச்யுதா சமந்தா கூறுகையில், மகிழ்ச்சியாக உள்ளது. சமுதாயத்தின் மனோநிலையை மாற்றுவதற்கும் சமூகத்தில் திருநங்கைகளுக்கு முக்கியத்துவத்தை வழங்குவதற்கு அதிகாரம் அளிப்பதற்கும் உதவும் என கூறினார்.
சாதனா கூறுகையில், இந்த வாய்ப்பு தனக்கு மிகுந்த தன்னம்பிக்கையையும், ஊக்கத்தையும் கொடுத்துள்ளதாகவும், இந்த வாய்ப்பை அளித்த கல்வி நிறுவன தலைவர் அச்யுதாவுக்கு தான் நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும் தெரிவித்தார்.
மேலும், கலிங்கா போன்ற ஒரு பெரிய நிறுவனத்தில் பணிபுரிவதே எனது ஒரே ஒரு லட்சியம். மற்றவர்களிடம் இருக்கும் திருநங்கைகள் மீதான தவறான அபிப்ராயத்தை மாற்ற முயற்சி செய்வதாகவும், திருநங்கைகளுக்கு சமூகத்தில் சரியான அங்கீகாரம் அளிக்கும் போது அவர்களாலும் சிறப்பாக செயல்பட முடியும் எனவும் சாதனா கூறினார்.