குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி செவ்வாய்க்கிழமை (ஜூன் 13) ஒரு நாள் பயணமாக காஞ்சிபுரம் வருகிறார்.
புது தில்லியில் இருந்து தனி விமானம் மூலம் செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு புறப்படும் அவர், பகல் 1.45 மணிக்கு அரக்கோணம் ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமானதளத்துக்கு வருகிறார். அங்கு இந்திய முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்ளும் அவர், சாலை மார்க்கமாக காஞ்சிபுரத்துக்கு குண்டு துளைக்காத காரில் செல்கிறார். பிற்பகல் 2.20 மணிக்கு காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் வழிபடுகிறார்.
இதைத் தொடர்ந்து, சங்கர மடத்துக்கு பிற்பகல் 3 மணிக்கு செல்லும் அவர், காஞ்சி சங்கராச்சாரியார்கள் ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆகியோரை சந்திக்கிறார். பின்னர், சங்கர மட வளாகத்தில் உள்ள ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் பிருந்தாவனத்தில் வழிபாடு நடத்துகிறார்.
இதையடுத்து, காஞ்சிபுரத்தில் இருந்து மீண்டும் சாலை மார்க்கமாக அரக்கோணம் ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமான தளத்துக்குச் சென்று, அங்கிருந்து தனி விமானத்தில் புது தில்லிக்கு மாலை 4.30 மணியளவில் திரும்புகிறார்.
குடியரசுத் தலைவரின் வருகையை முன்னிட்டு, காஞ்சிபுரம், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.