புது தில்லி: தன்னை விஷப் பாம்பு கடித்ததால், உயிர் பிழைக்க முடியாது என்று தெரிந்த நபர், தனது மனைவியையும் கடித்து ஒன்றாக உயிர் விட ஆசைப்பட்டார்.
ஆனால், அவரது கடைசி ஆசை நிறைவேறாமலேயே அவர் இறந்துவிட்டார்.
பிகார் மாநிலம் பிர்சிங்புர் கிராமத்தைச் சேர்ந்த ஷங்கர் ராய், தனது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போது விஷப் பாம்பு ஒன்று அவரை கடித்துவிட்டது. காலையில் எழுந்ததும், அவரது உடல்நிலை மிகவும் மோசமாகியிருப்பதையும் இனி தான் பிழைக்க முடியாது என்பதையும் அறிந்த அவர் உணர்ச்சி வேகத்தில் ஒரு முடிவெடுத்தார்.
தான் மிகவும் நேசிக்கும் மனைவி அமிரி தேவியும் தன்னுடன் ஒன்றாக உயிர் விட வேண்டும் என்று கருதி, அவரது கையை ஷங்கர் கடித்துவிட்டார். இதனால் அமிரி மயக்கமடைந்து விழுந்தார்.
இருவரும் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ஷங்கர் உயிரிழந்தார். தீவிர சிகிச்சை அளித்து அமிரியை மருத்துவர்கள் காப்பாற்றினர்.
இது குறித்து அமிரி செய்தியாளர்களிடம் பேசுகையில், "நான் உன்னை அதிகமாக நேசிக்கிறேன். எனவே நாம் ஒன்றாக உயிர் விட வேண்டும் என்று விரும்புகிறேன் என்று சொல்லி எனது கையை கடித்தார். நானும் அவர் என்னைக் கடிக்க அனுமதித்தேன்" என்கிறார் அப்பாவியாக.