லக்னோ: அலைபேசியில் பேசிக் கொண்டே அரசுப் பேருந்துகளை இயக்கும் ஓட்டுநர்களை, படம் பிடித்துஅனுப்பினால், பரிசு கொடுக்கும் புதிய திட்டத்தினை உத்தரப்பிரதேச அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெருகி வரும் சாலை விபத்துக்களை குறைக்கும் வகையில் புதிய முயற்சி ஒன்றை, யோகி ஆதித்யநாத் தலைமையிலான அம்மாநில அரசு நடைமுறைப்படுத்த உள்ளது. அதன்படி அரசுப்பேருந்துகளை இயக்கும் ஓட்டுநர்கள், பேருந்தினை இயக்கம் பொழுது செல்போனில் பேசிக்கொண்டிருந்தால், அதை புகைப்படம் எடுத்து அம்மாநில போக்குவரத்துறை வழங்கியுள்ள பிரத்யேக வாட்ஸ் அப் எண்ணிற்கு அனுப்பினால், புகார் அளித்தவர்களுக்கு பரிசுத்தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய திட்டத்தினை துவக்கி வைத்து, உத்தரபிரதேச மாநில போக்குவரத்து துறை அமைச்சர் ஸ்வந்திரே தேவ் சிங் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இவ்வாறு குறிப்பிட்ட ஒரு பேருந்து ஓட்டுநர் மீது புகார் அளிக்கப்பட்டால், முதலில் மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் அந்த ஓட்டுநருக்கு எதிராக தனியாக புகார் பதிவு செய்யப்படும். பின்னர் அதனைத் தொடர்ந்து ஆறு மாதம் வரை சிறை தண்டனை மற்றும் அபராதம் உள்ளிட்ட தண்டனைகள் வழங்கப்படும்
இவ்வாறுஅமைச்சர் தெரிவித்தார்.
மாநில அரசின் இந்த புதிய நடவடிக்கை வாகன விபத்தை பெருமளவில் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அம்மாநில போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.