தலித் மக்களுடன் சேர்ந்து உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உணவு உண்டது ஓர் அரசியல் நாடகம் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
தலித் மக்களை தாங்கள் வேறுபடுத்திப் பார்க்கவில்லை என்பது போன்ற மாயத் தோற்றத்தை ஏற்படுத்த பாஜக தொடர்ந்து முயன்று வருகிறது. அதன் ஒரு பகுதியாகவே, கோரக்பூரில் தலித் மக்களுடன் இணைந்து முதல்வர் யோகி ஆதித்யநாத் உணவு அருந்தியிருக்கிறார். இது முழுக்க முழுக்க ஓர் அரசியல் நாடகமாகும். அதனை தலித் மக்களும் நன்றாக அறிவார்கள்.
பாஜகவின் தலித் சார்பு நிலை உண்மையாக இருக்குமேயானால், சஹாரன்பூரில் இத்தகைய ஜாதி கலவரமே நடைபெற்றிருக்காது. அந்தப் பகுதியில் இன்னமும் தலித் மக்களுக்கு எதிரான வன்முறை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்காது.
சஹாரன்பூரில் தலித் மக்கள் மீது தாக்குதல் நடத்திய உயர் வகுப்பைச் சேர்ந்த முக்கியக் குற்றவாளியை போலீஸார் இன்னமும் கைது செய்யவில்லை. பாஜகவின் தலித் விரோத மனநிலையை பறைசாற்றுவதற்கு இந்தச் சம்பவங்களே போதுமானவை.
உத்தரப் பிரதேசம் மட்டுமன்றி, பாஜக ஆளும் மாநிலங்கள் அனைத்திலும் அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்படும் அவலமான சூழ்நிலையில்தான் தலித் மக்கள் வாழ்கிறார்கள்.
ஒருபுறம், தலித் மக்களை வஞ்சித்துவிட்டு, மறுபுறம் அவர்களுடன் ஒன்றாக அமர்ந்து உணவு உண்ணும் கலாசாரத்தை பாஜக கடைப்பிடித்து வருகிறது. இதுபோன்ற செயல்களால் பாஜக பலனடையப் போவது கிடையாது என தனது அறிக்கையில் மாயாவதி தெரிவித்துள்ளார்.
முன்னதாக, உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலையை முதல்வர் யோகி ஆதித்யநாத் கடந்த புதன்கிழமை திறந்து வைத்தார். அப்போது அவர் அங்குள்ள தலித் மக்களுடன் ஒன்றாக அமர்ந்து மதிய உணவினை உட்கொண்டார்.