உத்தர பிரதேசத்தில் உள்ள மொராதாபாத் காவல்துறையினர், உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் பொது இடங்களில் செல்ஃபி எடுப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
இந்தியா மட்டுமில்லாமல் உலகம் முழுவதிலும் இன்றைய நிலையில் ஒரு பிரபலமான கலாச்சாரமாய் மாறியிருப்பது சுயபடம் எனப்படும் செல்ஃபி. அண்மைக்காலங்களில் பல இளைஞர்களின் உயிரைப் பறித்துள்ளது வளர்ந்து வரும் இந்த அபாயகர செல்ஃபி ஆர்வம்.
“செல்ஃபி எடுப்பது தவறான செயல் இல்லை என்றாலும், ரயில்வே தண்டவாளங்களில், நெடுஞ்சாலைகளில் மற்றும் உயிரை அச்சுறுத்தக்கூடிய பல இடங்களில் செல்ஃபி எடுக்க முயற்சிப்பது, தற்கொலை செய்து கொள்வதற்கு நிகரானது” எனக் காவல் அதிகாரி அசிஷ் ஸ்ரீவாஸ்தவ் தெரிவித்தார்.
மேலும் ரயில் தடங்கள், பேருந்து நிலையங்கள் அல்லது உயரமான கட்டிடங்கள் போன்ற இடங்களில் நின்று செல்ஃபியோ அல்லது அவ்வாறான படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்வது தண்டனைக்குறியது என்றும் ஸ்ரீவாஸ்தவ் கூறியுள்ளார்.
கடந்த மாதம் தெலங்கானாவில் உள்ள அல்வல் ரயில் நிலையத்தில் செல்ஃபி எடுக்க முயற்சித்த இரு நண்பர்களில் ஒருவர் ரயில் மோதி இறந்ததோடு மற்றொருவர் தன் கையை இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு வெளியான ஒரு அறிக்கையின் படி, உலகிலேயே இந்தியாவில் மிக அதிகமான செல்ஃபி தொடர்பான மரணங்கள் ஏற்பட்டுள்ளது.