ஆஸ்திரேலியா செல்லும் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக, ஆன்-லைனில் நுழைவு இசைவு (விசா) பெறும் வசதியை அந்நாட்டு அரசு அறிமுகம் செய்யவுள்ளது.
வரும் 1-ஆம் தேதி முதல், இந்த வசதியை ஆஸ்திரேலியா அரசு அறிமுகம் செய்ய உள்ளது. இதனால், ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுலா செல்லும் இந்தியர்கள், இனி சிரமமின்றி நுழைவு இசைவு பெறலாம். இதுதொடர்பாக, ஆஸ்திரேலிய குடியேற்றம் மற்றும் எல்லைப் பாதுகாப்புத் துறை இணையமைச்சர் அலெக்ஸ் ஹாவ்கே திங்கள்கிழமை கூறியதாவது: சுற்றுலாப் பயணியாகவோ அல்லது வர்த்தக அலுவல்களுக்காகவோ ஆஸ்திரேலியாவுக்கு வருவோருக்கும், அல்லது இங்குள்ள உறவினர்களைப் பார்க்க வருவோருக்கும் இந்த ஆன்-லைனில் நுழைவு இசைவு பெறும் வசதி உதவிகரமாக இருக்கும் என்று அவர் கூறினார்.
இந்தியர்கள் விடுமுறையைக் கொண்டாட விரும்பும் இடமான ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுலாப் பயணிகளாக வரும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. 2017-ஆம் ஆண்டின் முதல் 4 மாதங்களில் மட்டும், 65,000 இந்தியர்களுக்கு ஆஸ்திரேலிய குடியேற் துறை சுற்றுலா நுழைவு இசைவு வழங்கியுள்ளது. இந்நிலையில், சுற்றுலா நுழைவு இசைவு பெறுவதில் கால தாமதம் ஏற்படுவதாக ஏராளமான இந்தியர்கள் புகார் தெரிவித்தனர். அதனடிப்படையில், ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுலா வர விரும்பும் இந்தியர்களின் சிரமத்தைப் போக்குவதற்கு தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.