எஃப் - 16 ரக போர் விமானங்களை இனி இந்தியாவில் தயாரிக்க வகை செய்யும் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
அமெரிக்காவின் லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனமும், இந்தியாவின் டாடா நிறுவனமும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
இந்திய விமானப் படையில் சேர்ப்பதற்காக அதிநவீன எஃப் 16 விமானம் உள்ளிட்ட பல்வேறு ரக போர் விமானங்களை வெளிநாடுகளிலிருந்து இந்தியா இறக்குமதி செய்து வந்தது.
இந்நிலையில், 'இந்தியாவில் தயாரிப்போம்' திட்டத்தின் கீழ் பிரதமர் நரேந்திர மோடி ஒரு மாதிரி திட்டத்தை முன்வைத்தார். அதில், இந்திய ராணுவத்துக்கான போர் விமானங்களை வெளிநாட்டு நிறுவனங்களுடன் இணைந்து நம் நாட்டிலேயே தயாரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மோடி கேட்டுக்கொண்டார்.
அந்த வகையில், எஃப் 16 ரக போர் விமானங்களை அமெரிக்க நிறுவனத்துடன் இணைந்து உள்நாட்டிலேயே தயாரிப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டது.
இந்நிலையில், அமெரிக்காவின் லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனத்துடன் இந்தியாவின் டாடா நிறுவனம் இணைந்து எஃப் - 16 ரக போர் விமானங்களை தயாரிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மேற்குறிப்பிட்ட இரண்டு நிறுவனங்களுக்கும் இடையே பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் திங்கள்கிழமை ஒப்பந்தம் கையெழுத்தானது.