பெண்கள் பாதுகாப்புக்கு புதிய கொள்கையை வகுக்க கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது என்று மகளிர், குழந்தைகள் நலத் துறை அமைச்சர் உமாஸ்ரீ தெரிவித்தார்.
கர்நாடக சட்ட மேலவையில் காங்கிரஸ் உறுப்பினர் ஜெயமாலா திங்கள்கிழமை எழுப்பிய கேள்விக்குப் பதில் அளித்து, உமாஸ்ரீ பேசியதாவது:
பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்புக்குத் தேவையான நடவடிக்கைகளை கர்நாடக அரசு தொடர்ந்து எடுத்து வருகிறது. இருந்தாலும், ஒரு சில இடங்களில் பெண்கள் மீது வன்முறைகள் நடைபெறுகின்றன. இதனை கருத்தில் கொண்டு, பெண்கள் பாதுகாப்புக்கான புதிய கொள்கையை வகுக்க கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான திட்ட அறிக்கை தயாராக உள்ளது. இதனை விரைவில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
பெண்கள் மட்டுமின்றி குழந்தைகள், சிறுவர்கள் மீது நடைபெறும் வன்முறை, தாக்குதலையும் தடுக்கும் வகையிலான கொள்கை வகுக்கப்படும். பெண்கள், குழந்தைகள் மீதான தாக்குதலை ஏற்க முடியாது.
பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பான மாநிலம் என கர்நாடகம் புகழ்பெற்றுள்ளது. அதற்கு களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் யாரேனும் செயல்பட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.