உத்தரப் பிரதேசத்தில் முந்தைய ஆட்சியின் திட்டங்கள் குறித்து பாஜக அரசு வெறும் விளம்பரத்துக்காகவே விசாரணை நடத்துகிறது என்று காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் ராஜ் பப்பர் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக, அவர் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:
உத்தரப் பிரதேசத்தில் பாஜக அரசு பொறுப்பேற்று சில காலமே ஆகியுள்ளது. எனினும், மாநில நலனுக்காக இந்த அரசு இதுவரை எதையுமே செய்யவில்லை. இந்நிலையில், அகிலேஷ் யாதவ் தலைமையிலான முந்தைய அரசின் திட்டங்களில் நடைபெற்றதாக கூறப்படும் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்துவதற்கு பாஜக அரசு உத்தரவிட்டுள்ளது.
(முந்தைய ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட கோமதி நதி மேம்பாட்டுத் திட்டத்தில் முறைகேடு நடைபெற்றதாகக் கூறி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதை குறிப்பி டுகிறார்). பரபரப்புக்காகவும், வெற்று விளம்பரத்துக்காகவுமே பாஜக அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. நாட்டில் விவசாயிகளின் தற்கொலை அதிகரித்து வரும் நிலையில், சர்வதேச யோகா தினத்தை கொண்டாடுவதற்கு மத்திய அரசு ஆயத்தமாகி வருகிறது.
யோகாவை சிறப்பிப்பதாக எந்தவொரு கட்சியும் முழு உரிமை கோர முடியாது. யோகாவானது பல்லாயிரம் ஆண்டுகளாக நமது நாட்டில் கடைப்பிடிக்கப்படும் பாரம்பரியக் கலையாகும்.
நாட்டில் விவசாயிகளின் நிலையும், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் நிலையும் மோசமாக உள்ளது. விவசாயக் கடன் தள்ளுபடி என்பது விவசாயிகளின் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வாக அமையாது. விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதை தடுப்பதற்காகவே விவசாயக் கடன் தள்ளுபடி அறிவிப்பு வெளியாகிறது என்றார் ராஜ் பப்பர்.