இந்தியாவின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 22 ஆளில்லா கண்காணிப்பு விமானங்களை வழங்க அமெரிக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதுகுறித்த தகவல்களை அந்நாட்டு அமைச்சக வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன.
அமெரிக்காவுக்கு அடுத்த சில நாள்களில் இந்திய பிரதமர் மோடி அரசு முறைப் பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், இத்தகைய ஒப்புதலை அமெரிக்கா அளித்திருப்பது இரு நாடுகளுக்கும் இடையேயான நல்லுறவில் புதிய மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் ப தவியேற்ற்குப் பிறகு இந்தியாவுடன் மேற்கொள்ளப்படும் முதல் முக்கிய ஒப்பந்தமாக இது இருக்கும் எனவும் கருதப்படுகிறது. இதுகுறித்து அமெரிக்க அரசு வட்டாரங்கள் கூறியதாவது: பாதுகாப்புத் துறையில் பரஸ்பரம் ஒத்துழைப்புகளை வழங்கிக் கொள்வதற்கான ஒப்பந்தங்களை இந்தியாவும், அமெரிக்காவும் ஏற்கெனவே மேற்கொண்டுள்ளன.
இந்நிலையில், அதனை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் விதமாக 22 ஆளில்லா கண்காணிப்பு விமானங்களை இந்தியாவுக்கு வழங்க அமெரிக்க அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது.
இது கிட்டத்தட்ட 300 கோடி டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.19,350 கோடி) மதிப்பிலான வர்த்தக நடவடிக்கையாகும். இந்த விமானங்களை ஜெனரல் அட்டாமிக்ஸ் என்ற நிறுவனம் உற்பத்தி செய்கிறது. அமெரிக்க அரசு ஒப்புதல் அளித்த விஷயம், முறைப்படி இந்திய அரசுக்கும், சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.