லக்னோ: தங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதை எதிர்த்து சூழ்ந்து கொண்டு கோஷமிட்ட பாஜக தொண்டர்களை, அச்சமின்றி துணிச்சலுடன் எதிர்கொண்ட பெண் போலீஸ் அதிகாரியின் விடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
உத்தரப்பிரதேசத்தில் தற்பொழுது யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாரதிய ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. உத்தரப்பிரதேசத்தின் புலந்த்ஷார் மாவட்டம் சயன்னா என்ற பகுதியைச் சேர்ந்தவர் ஷ்ரேஸ்தா தாக்குர். காவல்துறை அதிகாரியான இவர் கடந்த வெள்ளியன்று உரிய ஆவணங்கள் இன்றி வாகனம் ஒட்டியதாக பாரதிய ஜனதா கட்சி தொண்டர் ஒருவருக்கு அபராதம் விதித்து கைது செய்தார்.
உடனே கைது செய்யப்பட்ட பாஜக தொண்டருக்கு ஆதரவாக, புலந்த்ஷார் மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினரின் கணவரான பிரமோத் லோதியின் தலைமையில், பாஜக தொண்டர்கள் ஒன்று கூடி காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். அத்துடன் அவர்கள் ஷ்ரேஸ்தா தாக்குருடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.
கைது செய்யப்பட்டவரை விடுவிக்க வேண்டுமென்று கூறி சூழ்ந்து கொண்டு கோஷம் எழுப்பியவர்களை கண்டுஅஞ்சாமல், 'நீங்கள் உடனடியாக கலைந்து செல்லா விட்டால், உங்கள் மேல் கூடுதலான பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்படும்' என்று ஸ்ரேஷ்தா தெரிவித்தார்.
அத்துடன் தங்கள் மீது எப்படி வழக்கு பதிவு செய்யலாம் என்று அவர்கள் கேள்வி எழுப்பிய பொழுது, 'அப்படியானால் உங்கள்மீது எல்லாம் வழக்கு பதிவு செய்யக் கூடாது என்று முதல்வர் கையெழுத்திட்ட கடிதம் கொண்டு வாருங்கள்' என்றும் அவர் தைரியமாக கூறினார்.
அத்துடன் பாஜக தொண்டர்களை மட்டும் போலீஸ் குறி வைப்பதாக அவர்கள் கூறிய பொழுது, ச’ட்டத்தின் முன் அனைவரும் சமம் என்றும், தான் யாருக்கும் அஞ்சாமல் தன்னுடைய கடமையை செய்வதாகவும்' அவர் தெரிவித்தார்.
இந்த சம்பவத்தின் பொழுது பதிவு செய்யப்பட்ட விடியோ ஒன்று தற்பொழுது சமுக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
விடியோ: