ஜம்மு-காஷ்மீரில் காவல் துறை அதிகாரி ஒருவர் மர்ம கும்பலால் அடித்துக் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பொது இடங்களில் ரமலான் தொழுகையில் காவலர்கள் யாரும் ஈடுபட வேண்டாம் என்று ஜம்மு-காஷ்மீர் காவல் துறை அறிவுறுத்தியுள்ளது.
பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ள மசூதிகளில் மட்டும் தொழுகையில் ஈடுபடுமாறு அவர்களுக்கு காவல் துறை ஆலோசனை வழங்கியுள்ளது.
அனைத்து காவல் நிலையங்கள், இந்தோ திபெத் எல்லைப் பாதுகாப்புப் படை, மத்திய ரிசர்வ் போலீஸ் படை, எல்லைப் பாதுகாப்புப் படை, மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை உள்ளிட்ட காஷ்மீரில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள அனைத்துப் பிரிவுகளுக்கும் இந்த ஆலோசனை அடங்கிய சுற்றறிக்கையை அந்த மாநிலக் காவல் துறை அனுப்பி வைத்தது. சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ஜம்மு-காஷ்மீரில் காவல் துறை எல்லை வரம்புக்குள்பட்ட பகுதிகளில் உள்ள மசூதிகளில் மட்டும் காவலர்கள் ரமலான் தொழுகையில் ஈடுபட வேண்டும்.
காவலர்கள் தங்களின் பாதுகாப்பை உறுதி செய்துகொள்வதற்காகவே பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ள மசூதிகளில் தொழுகையில் ஈடுபடுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக காவல் துறை டிஜிபி எஸ்.பி.வைத் கூறுகையில், "இந்த சுற்றறிக்கையை முன்னெச்சரிக்கை அறிவிப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும். காவலர்களைப் பாதுகாப்பது எனது கடமை' என்றார்.
முன்னதாக, ஸ்ரீநகரில் உள்ள மசூதி ஒன்றின் வெளியே காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் ஒருவர் அண்மையில் மர்ம கும்பலால் கல்லால் அடித்துக் கொல்லப்பட்டார்.