கர்நாடக மாநிலம், உடுப்பியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கிருஷ்ணர் கோயிலில் ரமலான் நோன்பு துறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி கோயில் வளாகத்திலேயே சிறப்பு தொழுகையையும் இஸ்லாமியர்கள் நடத்தினர்.
அரசியல் ஆதாயத்துக்காக மதத்தை முன்னிறுத்தி சில கட்சிகள் பிரசாரம் செய்துவரும் நிலையில், எந்தவிதமான ஆர்ப்பாட்டங்களும் இன்றி இந்த நல்லிணக்க நிகழ்ச்சி நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
உடுப்பியில் உள்ள கிருஷ்ணர் கோயிலில் கடந்த வெள்ளிக்கிழமை இந்நிகழ்வு நடைபெற்றுள்ளது. இதற்காக கோயில் வளாகத்துக்குள்ளேயும், வெளியேயும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சுமார் 150-க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் இதில் பங்கேற்றனர். இப்தார் நோன்பு துறப்பு நிகழ்ச்சியைத் தொடர்ந்து, அவர்கள் அங்கு சிறப்புத் தொழுகை நடத்தினர். இதையடுத்து, அவர்களுக்கு விருந்து பரிமாறப்பட்டது.
பேஜாவர் மடத்தைச் சேர்ந்த விஸ்வேச தீர்த்த சுவாமிகள், இஸ்லாமியர்களுக்கு பேரீச்சம்பழங்களை வழங்கினார். மேலும், மடத்தைச் சேர்ந்தவர்கள் அவர்களுக்கு பல்வேறு பழ வகைகளையும் உணவுகளையும் வழங்கினர்.
இதுகுறித்து விஸ்வேச தீர்த்த சுவாமிகள் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறுகையில், "இது ஒரு சாதாரண நிகழ்ச்சி; இதனைப் பெரிதுபடுத்த வேண்டிய அவசியமில்லை; மதநல்லிணக்கத்துடனும், அமைதியுடனும் மக்கள் வாழ வேண்டும் என்பதுதான் எங்களது நோக்கம்' என்றார் அவர்.