மேற்கு வங்க ஆளுநரிடம் ஜாமீன் கோரி நீதிபதி கர்ணன் மனு

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி சி.எஸ். கர்ணன், தமக்கு ஜாமீன் அல்லது பரோல் வழங்குமாறு மேற்கு வங்க ஆளுநரிடம் மனு அளித்துள்ளார்.
மேற்கு வங்க ஆளுநரிடம் ஜாமீன் கோரி நீதிபதி கர்ணன் மனு

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி சி.எஸ். கர்ணன், தமக்கு ஜாமீன் அல்லது பரோல் வழங்குமாறு மேற்கு வங்க ஆளுநரிடம் மனு அளித்துள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதி கர்ணன் சென்னை, கொல்கத்தா ஆகிய உயர் நீதிமன்றங்களில் நீதிபதியாகப் பணியாற்றியபோது உச்ச நீதிமன்ற நீதிபதிகள், உயர் நீதிமன்ற நீதிபதிகள் உள்ளிட்டோருக்கு எதிராக ஊழல் புகார்களைத் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, சர்ச்சைக்குரிய அவரது நடவடிக்கைகளை உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு விசாரித்தது.
அந்த விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்ததாலும், அரசியல் சாசன அமர்வு உத்தரவின்படி மன நலப் பரிசோதனைக்கு உடன்பட மறுத்ததாலும், கர்ணனின் செயலை நீதிமன்ற அவமதிப்பாகக் கருதி அவரைக் கைது செய்து ஆறு மாதங்களுக்கு சிறையில் அடைக்க வேண்டும் என்று மேற்கு வங்க மாநிலக் காவல் துறை தலைமை இயக்குநருக்கு (டிஜிபி) உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு உத்தரவிட்டது.
இதையடுத்து, தமிழகத்துக்கு வந்த கர்ணனை கைது செய்ய மேற்கு வங்க காவல்துறையின் தனிப் படை சென்னை வந்தது. இருப்பினும் கர்ணன் தலைமறைவானதால் அவரைத் தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது.
இந்த நிலையில், கர்ணனின் நீதித் துறை பதவிக் காலம் முடிவுக்கு வந்து அவர் ஓய்வு பெற்ற சூழலில், கோவையில் தங்கியிருந்த கர்ணனை தமிழக காவல்துறை உதவியுடன் மேற்கு வங்க காவல்துறையின் தனிப் படையினர் கடந்த வாரம் கைது செய்து கொல்கத்தாவுக்கு அழைத்துச் சென்று சிறையில் அடைத்தனர். எனினும், சில நிமிடங்களில் நெஞ்சு வலிப்பதாக அவர் கூறியதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சூழலில், கர்ணன் சார்பாக அவரது வழக்குரைஞர்கள் மேற்கு வங்க ஆளுநர் கேசரி நாத் திரிபாதியிடம் அளிக்கப்பட்டுள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
நீதிபதி கர்ணனுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட உத்தரவு அரசியல் சாசனத்துக்கு உள்பட்டதுதானா என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
எனவே, அதுவரை அவருக்கு ஜாமீனோ, பரோலோ வழங்க உத்தரவிட வேண்டும். ஜாமீன் அல்லது பரோலில் விடுவிப்பதற்காக விதிக்கப்படும் எந்த நிபந்தனைகளையும் ஏற்க நீதிபதி கர்ணன் தயாராக உள்ளார் என்ற அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com