உத்தரப் பிரதேச கிராமொன்றின் மசூதியில் பன்றிக் கறி வீசி, முதியவர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து அந்தக் கிராமத்து முஸ்லிம்கள் ரமலான் பண்டிகைக் கொண்டாட்டத்தை புறக்கணித்தனர்.
உத்தரப் பிரதேசத்தின் நாஸிபூர் கிராமத்திலுள்ள மசூதி எதிரே, அடையாளம் தெரியாத நபர் கடந்த வெள்ளிக்கிழமை கறித் துண்டுகளை வீசினார். அவை பன்றிக் கறித் துண்டுகள் என்று கூறப்படுகிறது. மேலும், கறித் துண்டுகளை வீசுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த யூசுஃப் கான் என்ற 70 வயது முதியவரை அந்த மர்ம நபர் சுட்டுக் கொன்றார். இந்தச் சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் முறையிட்டும் போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கிராம மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், இந்தச் சம்பவத்துக்கும், போலீஸாரின் அலட்சியத்துக்கும் கண்டனம் தெரிவிக்கும் வகையில் ரமலான் பண்டிகையான திங்கள்கிழமை நாஸிபூர் கிராமத்து முஸ்லிம்கள் கருப்புத் துணி அணிந்து தொழுகையில் ஈடுபட்டனர். மேலும், வழக்கமாக நடைபெறும் ரமலான் கொண்டாட்டத்தை இந்த ஆண்டு அவர்கள் புறக்கணித்தனர்.
உயிரிழந்த யூசுஃப் கான் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும்; அவரை சுட்டுக் கொன்ற குற்றவாளியை கைது செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.