தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் ராம்நாத் கோவிந்த் ஜம்மு- காஷ்மீரில் புதன்கிழமை (ஜூன் 28) ஆதரவு திரட்டுகிறார்.
இதுதொடர்பாக, மத்திய செய்தி - ஒலிபரப்புத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் ராம்நாத் கோவிந்த், ஜம்மு- காஷ்மீரைச் சேர்ந்த எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களிடம் ஆதரவு திரட்டுவதற்காக புதன்கிழமை ஸ்ரீநகருக்குச் செல்கிறார். அவருடன் நானும் செல்கிறேன்.
ஜூலை மாதம் 4-ஆம் தேதி ராம்நாத் கோவிந்த், தெலங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேச மாநிலங்களுக்குப் பயணம் மேற்கொள்கிறார்.
அப்போது, இந்த மாநிலங்களைச் சேர்ந்த எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களிடம் அவர் ஆதரவு திரட்டுகிறார். இப்பயணத்தின்போது, ராம்நாத் கோவிந்துக்காக நானும் ஆதரவு திரட்டவுள்ளேன் என்றார் வெங்கய்ய நாயுடு.
குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை மாதம் 17-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், ராம்நாத் கோவிந்த் ஒவ்வொரு மாநிலமாக பயணம் மேற்கொண்டு தமக்கு ஆதரவு திரட்டி வருகிறார்.