நெய்டாவில் மருத்துவரால் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட பெண் உயிருடன் எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காதல் திருமணம் செய்த பெண் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக, பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த உண்மை தெரிய வந்துள்ளது.
புகாரின் அடிப்படையில், இறுதிச் சடங்கின் போது பாதி எரிந்த நிலையில் மீட்கப்பட்ட பெண்ணின் உடலை பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழு, அவர் எரிக்கப்பட்ட போது உயிருடன் இருந்ததை உறுதி செய்துள்ளனர்.
இது குறித்து ஆங்கில நாளிதழ் ஒன்றில் வெளியான செய்தியில், கிரேட்டர் நெய்டாவில் உள்ள ஷாரதா மருத்துவமனையில் நுரையீரல் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த பெண், ஞாயிறன்று மரணம் அடைந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
இதையடுத்து, அவரது உடல் உறவினர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 8 மணி நேரம் கழித்து இறுதிச் சடங்கு செய்யப்பட்டது.
இந்த மரணம் குறித்து தகவல் அறிந்த பெண்ணின் சகோதரர், சாவில் சந்தேகம் இருப்பதாகக் கூறி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இறுதிச் சடங்குகள் நடந்து கொண்டிருந்த போது சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர், 70 சதவீதம் எரிந்த நிலையில் இருந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பிரேத பரிசோதனையில், அப்பெண்ணின் நுரையீரலில் சாம்பல் துகள் இருந்ததாகவும், எரியூட்டப்பட்ட போது அவர் உயிருடன்தான் இருந்தார் என்றும் தெரிவிக்கப்பட்டது.
பிரேத பரிசோதனை கிடைத்ததும், அப்பெண்ணின் உறவினர்கள், கணவர் மற்றும் குடும்பத்தார் மீது வழக்குப் பதிவு செய்தனர். ஆனால் அவர்கள் தலைமறைவானதைத் தொடர்ந்து காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
புலந்ஷஹர் பகுதியைச் சேர்ந்த அப்பெண், 2 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்து கொண்டு நொய்டாவில் வசித்து வந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.