நாட்டில் குழந்தைக் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக கூறப்படும் செய்திகள் மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது என்று அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரும், குழந்தைகள் நல ஆர்வலருமான கைலாஷ் சத்யார்த்தி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் புது தில்லியில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையின் விவரம்:
தில்லி உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் குழந்தைகள் கடத்தல் சம்பவம் நிகழ்ந்து வருவதாக செய்திகள் வெளியாகி வருவது மிகவும் கவலை தரும் விஷயமாகும். அரசும், குடிமைச் சமூகக் குழுக்களும் பல்வேறு முயற்சிகள் எடுத்த போதிலும் அடிமைத் தனத்தின் நவீன வடிவங்களில் இருந்தும், கடத்தப்படுவதிலிருந்தும் இளம் பெண் மற்றும் ஆண் குழந்தைகளைப் பாதுகாப்பதில் நாம் தோல்வியடைந்து வருகிறோம். மேலும், இது தொடர்பான புள்ளி விவரங்கள்கூட சரியாக இல்லை.
பிகார், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் எல்லை கடந்த கடத்தலில் இருந்து மீட்கப்பட்ட நபர்களை அவர்களது சொந்த ஊருக்கு திரும்ப அனுப்புவதிலும் போதிய ஆதரவு இல்லாத நிலை உள்ளது. அவர்களை அடையாளம் கண்டறிவதற்கான போதிய ஆவணங்களும் இல்லை. இதனால், அவர்கள் மேலும் சுரண்டலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். சட்டத்தில் உள்ள முரண்பாடுகள் காரணமாக கடத்தல் வழக்குகளை விசாரிப்பதில் தேசிய, பிராந்திய அரசுத் துறைகளுக்கு சிரமம் உள்ளது. இது தவறு இழைப்போரை குற்றத்தில் சுதந்திரமாக ஈடுபட வைக்கிறது.
எனவே, இதன் அவசரத் தன்மையை உணர்ந்து விரிவான மனிதக் கடத்தல் தடுப்பு மசோதாவை கொண்டு வந்து நிறைவேற்ற அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார் கைலாஷ் சத்யார்த்தி.