புது தில்லி: அதிவேகமாக லாரி ஓட்டி விபத்தை ஏற்படுத்தி, சிறுவன் மரணத்துக்குக் காரணமாக இருந்த ஓட்டுநர், தனது வாழ்நாள் முழுவதும் எந்த வாகனத்தையும் ஓட்டக் கூடாது என்று தில்லி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இது குறித்து உத்தரவு, நாடு முழுவதும் உள்ள அனைத்து ஆர்டிஓக்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2000ஆவது ஆண்டு அதிவேகமாக லாரியை ஓட்டி 9 வயது சிறுவன் பலியாகக் காரணமாக இருந்த ஓட்டுநர் சுனில் குமார் மிஷ்ராவின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய உத்தரவிட்டுள்ள நீதிமன்றம், அவர் வாழ்நாள் முழுவதும் எந்த வாகனத்தையும் ஓட்டக் கூடாது என்றும், அவருக்கு எந்த ஆர்டிஓவிலும் ஓட்டுநர் உரிமம் வழங்கக் கூடாது என்றும், தனது வாழ்நாள் முழுவதும் அவர் எந்த வாகனத்தையும் இயக்க தடை விதிப்பதாகவும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், கவனக் குறைவாக வாகனத்தை ஓட்டி பள்ளிச் செல்லும் சிறுவன் மரணத்துக்குக் காரணமாக இருந்த குற்றத்துக்காக குற்றவாளி சுனிலுக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 17 ஆண்டுகளாக நடந்து வரும் வழக்கு விசாரணையில், குற்றவாளியின் குடும்பம் மற்றும் பொருளாதாரப் பின்னணியைக் கருதி, கீழ் நீதிமன்றம் அவருக்கு விதித்த 18 மாத சிறைத் தண்டனையை, தில்லி நீதிமன்றம் ஓராண்டாகக் குறைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.