சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு: மணிப்பூர் பாரதிய ஜனதா அரசு  வெற்றி!

மணிப்பூர் சட்டப்பேரவையில் இன்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜகவின் பிரேன்சிங் தலைமையிலான அரசு வெற்றி பெற்று தனது பெரும்பான்மையை  நிரூபித்தது.
சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு: மணிப்பூர் பாரதிய ஜனதா அரசு  வெற்றி!

இம்பால்: மணிப்பூர் சட்டப்பேரவையில் இன்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜகவின் பிரேன்சிங் தலைமையிலான அரசு வெற்றி பெற்று தனது பெரும்பான்மையை  நிரூபித்தது.

சமீபத்தில் நடந்து முடிந்த மணிப்பூர் சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை. மொத்தம் உள்ள 60 தொகுதிகளில் காங்கிரஸ் 28 இடங்களிலும், பா.ஜனதா 21 இடங்களிலும் வெற்றி பெற்றன. தனிப் பெரும்பானமைக்குத் தேவையான 30 இடங்களை பிடிக்க, காங்கிரசுக்கு வெறும் 3 இடங்கள் மட்டுமே  தேவைபட்டது. ஆனாலும் இதர சிறிய கட்சிகள் ஆதரவுடன் பாரதீய ஜனதா 33 உறுப்பினர்களின் ஆதரவைப்  பெற்றது.

இதையடுத்து மணிப்பூரில் பாரதீய ஜனதா ஆட்சி அமைந்தது. மாநில முதல்வராக பிரேன் சிங்  கடந்த  15 ஆம் தேதி பொறுப்பேற்றுக்கொண்டார். அவருடன் ஆதரவுக் கட்சியான தேசிய மக்கள் கட்சியை சேர்ந்த ஜாய் குமார் துணை முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவருடன் மேலும் 8 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.

இந்நிலையில் கவர்னரின் நஜ்மா ஹெப்துல்லா தெரிவித்துள்ளபடி இன்று  சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று முதல்வர் பிரேன் சிங் அறிவித்தார்.

முதலில் இன்று சபை கூடியதும் மணிப்பூர் சட்டப்பேரவை சபாநாயகரான பாஜகவின் யும்நம் கேம்சந்த் குரல் வாக்கெடுப்பின் மூலம் தேர்வு செய்யப்பட்டார். அதன் பின்னர் அவையில் அரசின் மீது நம்பிக்கை தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்தின் மீது ரகசிய வாக்கெடுப்பே நடத்த வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. ஆனால், சபாநாயகர் அக்கோரிக்கையை நிராகரித்துவிட்டார்.

அதன் பின்னர் குரல் வாக்கெடுப்பு நடைபெற்றது. மொத்தமுள்ள 60 தொகுதிகளில் காங்கிரஸ் 28, பாஜக 21 இடங்களைக் கைப்பற்றின. நாகாலாந்து மக்கள் முன்னணி 4, தேசிய மக்கள் கட்சி 4, லோக் ஜன சக்தி 1, திரிணமூல் காங்கிரஸ் 1, சுயேச்சை 1 தொகுதியில் வெற்றி பெற்றன.

பெரும்பான்மையை நிரூபிக்க 31 எம்எல்ஏக்கள் தேவை என்ற நிலையில், பாஜகவின் 21 எம்.எல்.ஏக்கள் தவிர இன்றைய நம்பிக்கை வாக்கெடுப்பில் நாகாலாந்து மக்கள் முன்னணியின் 4 எம்.எல்.ஏ.க்கள், தேசிய மக்கள் கட்சியின் 4 எம்.எல்.ஏ.க்கள், காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ. ஷியாம்குமார் சிங் மற்றும் திரிணமூல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ரபீந்த்ரோ சிங் ஆகியோர் பாஜகவுக்கு ஆதரவு அளித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக அரசு வெற்றி பெற்றதாக சபாநாயகர் யும்நம் கேம்சந்த் அறிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com