ஹைதராபாத்: ஆந்திர மாநிலம் வளர்ச்சியிலும் ஊழலிலும் முதல் இடத்தில் இருப்பதாக, அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு வாய் தவறி சொன்ன விவகாரம் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
ஆந்திர மாநில சட்டப்பேரவையில் பேசியபோதுதான் முதல்வர் சந்திரபாபு நாயுடு இவ்வாறு கூறினார்.
சட்டப்பேரவையில் நேற்று ஆளும் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர். அப்போது பேசிய ஜெகன்மோகன் ரெட்டி, மாநிலத்தில் அறிவிக்கப்பட்ட பல்வேறு நலத்திட்டங்கள் இதுவரை செயல்படுத்தப்படாமலேயே இருப்பதாகவும், சந்திரபாபு நாயுடு பொய்களைக் கூறி வருவதாகவும் குற்றம்சாட்டினார்.
இதற்கு பதில் அளித்த சந்திரபாபு நாயுடு, இந்தியாவிலேயே ஆந்திர மாநிலம் தான் ஊழல் மற்றும் வளர்ச்சியில் முதலிடம் வகிப்பதாக வாய் தவறி கூறிவிட்டார்.
அப்போது எதிர்க்கட்சிகள் கோஷமிட்டுக் கொண்டிருந்ததால் சந்திரபாபு நாயுடுவின் இந்த பேச்சினை யாரும் கவனிக்கவில்லை. அதன்பிறகு வெளியான விடியோக்களை வைத்து எதிர்க்கட்சிகளின் சர்ச்சையை எழுப்பினர்.
எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் பலரும் இந்த விடியோவை சமூக தளங்களில் பரப்பி வருகின்றனர்.